Friday, September 18, 2009

நாட்டுப்புறப் பாடல்

சில்லுனு சில்லுனு மழை தூற- என்
செவ்வந்தி நீ எங்கப் போற ?
சில்லுனு சில்லுனு மழை தூற-என்
செங்கமலம் நீ எங்கப் போற ?
(சில்லுனு)
கூடல் நகர் நான் போயி வந்தேன் -ஒரு
கூடப் பூவு வாங்கி வந்தேன்
ஊடல் கொண்டு போறவளே -நான்
உன்னத் தேடி ஓடி வந்தேன்.

ஆடி வரும் மெல்லினமே -என்
அத்த பெத்த ரத்தினமே
சேந்துக்கலாம் சேந்துக்கலாம் செல்லமே
இளையராசாவுக்கு வாக்கப்படு அன்னமே !
(சில்லுனு)

சின்ன சின்ன பூவெடுத்தேன் -அந்த
வானவில்லில் நாறெடுதேன்
சேந்துக்கலாம் சேந்துக்கலாம் செல்லமே -உன்
பாதத்துக்கு காத்திருக்கு என் இல்லமே !
(சில்லுனு)
இனியவன் .ஜி.இளையராஜா

காதல் மழை

எழுத்துக்களை திரட்டுகின்றேன்
வார்த்தை மாலையாக்க
என்னைச் சுற்றிலும் காகித மலைகள்.

ஓவ்வொரு சந்திப்பிலும்
நீ திருத்தப்பட்ட ஓவியமாய்
சிரிக்கிறாய்!

நான் ஏக்கங் கொண்டவனாய்!
நீ ஏதும் அறியாதவளாய்?

கோலப் புள்ளியாய் நீ
உனைச் சுற்றும் கோடுகளாய் நான்
கண்டிப்பாய் நமை
கரைத்து இணைக்கும்
காதல் மழை

இனியவன். ஜி. இளையராஜா

மழைத்துளி 3

மரண வேர்களில்
மனிதச் செடிகள்
அழுகிப் போகுமுன்
இனித்துவிட்டுப் போ !

இனியவன் .ஜி.இளையராஜா

மழைத்துளி 2

சில பூவினம்
தேன் சுரப்பது
வண்டுக்க்காகவா?
மகரந்த சேர்க்கைக்காகவா ?
ஓ!
பூவிலும் கையூட்டா?!

இனியவன் .ஜி.இளையராஜா

மழைத்துளி 1

நிலவில்
நட்சத்திரங்கள்
உன் பருக்கள்.

இனியவன் .ஜி.இளையராஜா

மா மரச் சோலையிலே !

மா மரச் சோலையிலே !
மழை மேகம் வருகின்ற
வேளையிலே !

மிதமான தூறலும்
இதமான சாரலும்
மண் வாசத்தோடு ஒருமிக்க

மா படர் கிளையின்
கீழே ஒரு சோடி
குலவுகின்றது தம் பருவம் பாடி

முத்தமிழே !நிறைமதியே !
முக்கனியே முத்தந்தரவா
அல்லேல் நீ எனக்கு
முத்தம் தர வா

விளிக்கின்ற காளையை
விழியோரமாய்த் தாக்கினாள்
விதியால் வந்ததோ
அதனின் வலிய
சதியால் வந்ததோ ?

பார்த்து நின்ற குருவி ஒன்று
பறந்திட்ட வேளையில்
கிளையில் இருந்த தூசு
பாவையின் பாவையில் பட்டது

துடித்திட்டன மான்விழிகள்
துயருற்று அய்யோ என்றன
செவ்விதழ்கள்

நிலை குலைந்த காளை
நிலை உணர்ந்த வேளை
தலைப் பற்றி விழி திறந்து
மென்மையாய் ஊதலானான்
அவளில் ஊறலாணன்

கரம் பட்டதும்
அவன்
கனல் பட்டதும்
வில்லாக வளைந்தால் கோதை
விவரமாக போட்டான் பாதை

காளையின் கை விரல்கள்
மெல்ல நகன்று
காதலியின் செவியை வருட
நமக்கேன் வம்பென்று
கழன்று வீழ்ந்தது காதணி

பூங்கோதை இடையினிலே
கைப் பதித்து
நெற்றி முன் சுருளும் முடி நகர்த்தி
உச்சி முகர்ந்து
நாசித் தடவி
ஆரம்பித்தான் இதழ் பொருத்தி
ஆங்கே மூண்டது ஓர் பெருந்தீ

இன்னுமா நிற்கிறீர்கள் இங்கேயே
உங்களைதான்
சாய்கிறது பொழுது
பெருமழை வருவதற்குள்
சென்றுவிடுங்கள்
சாய்த்தவலும்
சாய்ந்தவனும்
இனி மீண்டெழ நேரமாகும் .

இனியவன் . ஜி .இளையராஜா

Friday, September 4, 2009

நாட்டுபுறப் பாடல் !

சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?

அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா ?

ஆத்தங்கரை ஓரத்துல
அந்தி மழை மேகத்துல
சேர்ந்து நாம நனஞ்சிருந்தோமே ,
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

கம்மாக்கரை ஓரத்துல ,
கால்வாயுக்கு பக்கத்துல
உம்மடி மேல படுதிருந்தேனே ?
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

ஆடு மேய்க்க வருகையில
ஐயனாரப்பன் கோவிலிலே '
கைய புடுச்சி இழுத்தேனே ,
அத்த நீ மறந்தியா ?
புள்ள அய்த்தான மறந்தியா?

கொய்ய மரத்துல அணில் புள்ள
நீ தான் எனக்கு மாப்புள்ள
சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?

எங்கப்பன்கிட்ட பொண்ணு கேளு
சேர்ந்து வாழ மண்ணு கேளு
சொன்னத மறந்தியா ?
சொர்ணமே என்ன நீ மறந்தியா ?
இனியவன் .ஜி.இளையராஜா

Tuesday, April 28, 2009

வானவில் கிளியே

என் கிரகத்தில் இறங்கிய
செயற்கைக்கோள் நீ
சரியான தளத்தில் இறங்கியதால்
பேருவகை கொள் நீ

நேற்றுவரை என் கிரகத்தில்
நாதஸ்வர இசைகள் இல்லை
இராட்சச காற்றாடிகளின்
விசைகள் இல்லை

கற்பனையில் வந்த தேவதைகள்
இன்று கண்ணடித்து செல்ல
வானிலை ஆய்வாளன்
சொல்லாத புயலொன்று
என் வாழ்வில் வீசுதடி

வவ்வால்கள் ஒலியெல்லாம்
என் காதில் கேட்குதடி
சோதிட கட்டங்கள்
சாதகமாய் இருக்குமா ?
சொல்லிவிட்டுச் செல்லடி
என் வானவில் கிளியே.

பூபாளம் பாடும் முன்
கண் விழிக்கிறேன் .
புல் நுனியில் நின்று
கவிதை வரைகின்றேன்.

திடிரென,
எனக்குள் ஏற்பட்ட மாற்றமா ?
இதுவேதான் காதலுக்கு தேற்றமா?

இனியவன் .ஜி.இளையராஜா

நிலாக் காலம்

புல்லாங்குழல்
துளைகள் நீ
உன்னில் ஊடுருவும்
காற்று நான்
இசையானோம் .

அழகிய அலைகள் நீ
பதிந்த சுவடுகள் நான்
கரைந்து போனோம்.

நீர்நிலை
நீ
குளிர்நிலை
நான்
உறைந்து போனோம் .

உன்னில் நானும்
என்னில் நீயும் உணர்வுகளில்
மறைந்து போனோம்.

சிப்பி நீ
மழை துளி நான்
முத்தானோம்.

விழி நீ
ஒளி நான்
கட்சியானோம்.

வார்த்தை நான்
பொருள் நீ
மொழியானோம்

புள்ளியாய் நீ
கோடுகளாய் நான்
கோலமானோம் .

எதிர்ப்புகளை
மீறாததால்
வெவ்வேறு குடும்பமாகி
காதலில் காலமானோம்.


இனியவன் .ஜி.இளையராஜா

கறி சமைப்போம் வா !

வலிகள் தான் வாழ்க்கை
வளைந்து கொடுப்போம்.
வண்ணத்துப்பூச்சியாய் வாழ்ர்ந்து பார்போம்.

மொழி பேசும் ஊமையாய்
விழி நீரை துடைத்து
இடி தாங்கிய வாழ்வு
இன்றோடு முடியுமா?

காளான் கீழ் வாழும்
சூரியனாய் இல்லாமல்
கற்பனையிலாவது நாம் கவலை மறப்போம்.

காட்சிகள் மட்டுமே வேறு
கலங்கரை இல்லாத கடலலை கப்பலாய்
தினம் கவலைகள் நூறு.

சோம்பலாய் இருந்து
சாம்பல் ஆகாமல்
புண்ணுக்கு மருந்திட்டது போதும்
வா !போருக்குப் போவோம்.

விண்மீன் வெளிச்சங்கள் போதும்
விரக்தியை விரட்ட,
சிறுமீன் போதும் சுறாக்களை பிடிக்க

எண்ணங்களை தூசு தட்டி
தன்னம்பிக்கை வண்ணம் பூசு
வெளிச்சங்கள் உன் வாழ்வில்
தானாய் தீந்தேனாய் வரும்.

உன்னை பகுத்த வாழ்வை
வரிசைப் படுத்து ,
உந்தன் வலிகளை எல்லாம்
வாரி இசைப் படுத்து.

வீறு கொண்டு வா
அணி அமைப்போம்
கவலை காய்களை அறுத்து
மகிழ்ச்சி கறி சமைப்போம்.

இனியவன் .ஜி.இளையராஜா

புதியதொரு நிலவு செய்வோம் !

இரவின் நிலவினை இரவல் வாங்காமல்
இன்னுமொரு நிலவு செய்வோம் !
இருண்ட வறுமையை இல்லாமல் செய்ய,

சிவப்புக் கோட்டில்
பச்சை விளக்கெரிய,
பூமி முழுதும் பயிர் செய்வோம்
புன்னகை மட்டும் கொண்ட
உயிர் செய்வோம்.

களத்து மேட்டில்
வறண்டு போன நிலத்தில்
உழவனின் திருவடியும்,
காளையின் குளம்படியும்,
நேற்று கண்டேன்.

வா! நாளை மழை வந்து
கரையும் முன்பாய் ,
புகைப்படம் எடுத்து கோப்பிடுவோம்,
சமகாலத் தோழர்களை கூப்பிடுவோம்.

கணினி காதலன் எனக்கும்
கலப்பை பிடிக்க ஆசை .
வா! சேர்ந்து செய்வோம் உழவு பூசை.

நாளை அந்த புகைப்படம்,
வெறும் கண்காட்சி,
இந்திய விளைச்சலுக்கு,
இனி நம் மண் சாட்சி .
இனியவன் .ஜி .இளையராஜா

Saturday, March 14, 2009

அலையில் ஆடும் படகு

பேசிக்கொள்ளாமலேயே
நீயும் நானும்
வெகு நேரம் அமர்ந்திருக்கிறோம் ,
உரக்க கத்திப் பெய்கிறது மழை .

புத்தகங்களை பல முறை
பரிமாறிக் கொள்கிறோம்
அதென்னவோ
உன்னிடம் இருந்து திரும்புகையில்
என் புத்தகத்திற்கு
சிறகு முளைத்து விடுகிறது .

அன்றைக்கு நீ
ஏதேதோ கதைச் சொல்லி
சிரித்துக் கொண்டே இருக்கிறாய்
அசைவற்று நிற்கிறேன்
உன் அசைவில்.

எல்லோரிடமும் பென்சில் வாங்கி
திருப்பி தந்திருக்கிறாய்
என்னிடம் இருந்து
நீ வாங்கியது ஒருமுறைதான்
அதை ஏன் திருப்பி தரவே இல்லை?

விளையாட்டாய்
உன் தோழி சடையை பிடித்து இழுக்க ,
நீ தான் இழுத்தாய்
என சண்டை போட்டாயே
அன்று முதல்
ஆரம்பித்தது
உன் மீதான
என் உட்கிரகிப்புகள் .

அன்று நீ அழகாக
பாடியபோது
ஆசிரியர் முதல் அனைவரும் கை தட்ட
நான் உன்னை பாராட்டவே இல்லை
ஏனென்று இதுவரை தெரியவில்லை
அதைப் பற்றி நீயும் கேட்கவே இல்லை .

உன் தந்தைக்கு
வேலை மாற்றல்
வேறொரு ஊருக்கு
நீ பயணிக்கிறாய் .
எப்போதும் போல
நீ சிரித்து விட்டு செல்கிறாய்
நானோ
அலையில் ஆடும் படகாய்.

இனியவன்.ஜி.இளையராஜா

எண்ணக் குமிழ்கள் 5

பெறுவோம் பொறுப்பு அடைவோம் சிறப்பு .

எதையோ பேர் இந்த நாட்டை ஆண்டார்கள் ,போரில் எத்தனையோ பேர் மாண்டார்கள் .

வரலாற்றில் நிற்பது ஒரு சிலர் தானே .ஆணைக்கு அடிபனிபவனாக இருப்பதா? ஆணையிடுபவனாக இருப்பதா ?

முடிவு உன் கையில் .

ஒரு சீன பொதுமொழி ,
டிராகனின் வாலாயிருப்பதா ?
கோழியின் தலையாய் இருப்பதா?

வாலாயிருந்தால் ,ஏதேனும் ஒரு தலையை பின் தொடர வேண்டும் .
தலையாய் இருப்பின் என்ன செய்ய வேண்டும் என்பதை ,நீ தீர்மானிக்க வேண்டும் .

பொறுப்புகள் உன் மீது திணிக்கப் பட்டிருந்தாலும் ,
பொறுப்புகளை நீயாக எடுத்துக் கொண்டாலும் ,

குழுவாக செயல்பாடு ,குறைகளைப் பிரித்தெடு,நிறைகளை குறிப்பிடு .

ஒன்று முக்கியம் ,
முதலில் கற்றுக்கொள் ,பிறகு பெற்றுக்கொள் .


இனியவன். ஜி .இளையராஜா

எண்ணக் குமிழ்கள் 4

கொள்கை கொள் .

இலக்கு இல்லாமல் பயணிக்கும் அம்பு வெற்றியை நிர்ணயிக்குமா ?

பிறந்து விட்டோம் என்று வாழாதே ,நீ பிறந்ததே வாழ்வதற்குத்தான் .

வாழ்க்கை உன்னை எடுத்துச் செல்வதா ? இல்லை ,நீ வாழ்வை எடுத்துச் செல் .
எது வேண்டும் ?எது வேண்டாம் முடிவு செய் .

ஒரு பாறையில் தேவையானதை மட்டும் வரைந்தால் , அது ஓவியம் .
தேவையில்லாததை நீக்கி விட்டால் , அது சிற்பம் .

சிற்பம் வரைவதாயினும் ,ஓவியம் வரைவதாயினும் முதலில் நீ தீர்மானிக்க வேண்டும் .

ஒரு பேருந்து நிலையம் ,
எங்கு செல்வது என்று தெரியாமலேயே நீ சுற்றிக் கொண்டிருந்தால், என்றைக்கும் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான் .

எந்த ஊருக்கு போவது என்பதை தீமானித்து விட்டால் ,எப்படி அதை சுலபமாக அடைவது ?

அதற்கான முயற்சிகளில் இறங்குவோமானால் , இலக்கை அடைவது எளிது .

கொள்கை கொள் ,தொடு வில் ,வெற்றி இல்லை தொலைவில் .

இனியவன். ஜி .இளையராஜா

Wednesday, January 28, 2009

எண்ணக் குமிழ்கள் 3

தோல்வியைக் கொண்டாடுவோம் .
போட்டி என்று ஒன்று இல்லை என்றால் வெற்றி தோல்வி என்பது கிடையாது .

தோல்வி என்பது ஒன்று இல்லை என்றால் வெற்றியின் இனிமையை அறிய இயலாது .

‘’பத்தாவது முறையாக கீழே விழுந்தவனைப் பார்த்து
பூமா தேவிச் சொன்னாளாம் , நீதான் ஒன்பது முறை எழுந்து நின்ற மாவீரன் என்று ’’.

வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்ற போட்டி பொறாமையாக மாறக்கூடாது .


நான் சிறு வயதாக இருந்தபோது என் வீட்டிற்கு அடிக்கடி என் தந்தையுடன் பேச வரும் ''டைலர் தாத்தா ’’சொன்னது நினைவுக்கு வருகிறது .

‘’பொறாமை ‘’ என்பது இருக்க கூடாது இருந்தால் அதை திருப்பி போட்ட நிலைதான் என்பார் {மைறபோ }.

தயவு செய்து ,முயற்சிகாதவர்கள் தோல்வியைப்பற்றி பேசாதீர்கள் .

ஒரு வேலை தோற்று விட்டால் என்று நினைத்தே ,சிலர் சோதனைகளை தள்ளி போடுகிறார்கள் .

தோற்று போவதில் கூட வெற்றியைத் துரத்தி தோற்றுப்போக வேண்டும் .அந்த தோல்வி தான் அடுத்த வெற்றிக்கு வித்தாக அமையும் .

வள்ளுவன் சொல்லுவான் ,
‘’யானை பிழைத்த வேல் ஏந்தல் அரிது ”.

{ஒரு காட்டில் முயலை வெற்றிகரமாக பிடித்து விட்டேன் என்பதை விட .ஒரு யானையை வேட்டையாடப் போய் உன் வேலே பறி போவது தான் வீரம் }

இன்று உலக அளவில் பேசப்படுகிற இந்தியர் அமிதாப்பச்சனின் குரல் ஆரம்ப காலத்தில் ,
இலங்கை வானொலியில் குரல் தேர்வில் நிராகரிக்கப்பட்ட ஒன்று .

அன்று அவர் தோற்காமல் போயிருந்தால்
இன்று இந்த நிலையை அடைந்திருப்பரா ?.

எனவே ,

நண்பர்களே ,தோல்வியைக் கொண்டாடுவோம் .
இனியவன் .ஜி . இளையராஜா

ஒரு கரித் துண்டும் சில வண்ணப் பொடிகளும் .

அந்த
உயர்ந்த ஆலமரத்தின் அடியில்
பேருந்து
நிறுத்தத்திற்கு அருகில்

எனைப் பலமுறைப்
பார்த்திருக்கலாம் .

காய்ந்த தரை
ஒரு கரித்துண்டு
சில வண்ணப் பொடிகள்.

சாலையை யொட்டிய தரை
அடுத்து ஒரு சின்ன மேடை
ஓரமாய் ஒருக் கூடை .

கூடைக்குள் இரண்டு பழைய வேட்டிகள்
ஒரு கிழிந்த துண்டு
என் காதலியின்
பழைய
கருப்பு வெள்ளை
புகைப்படம் .

ஒரு கண்ணாடிக் கோப்பையில்
காலையில்
குடித்தது போக
மீதித் தேநீர்

என் ரொட்டித் துண்டுக்கு காத்திருக்கும்
நான்கு காக்காய்கள் .

சட்டைப் பையில்
நேற்றைய ஓவியத்திற்கான
சில எட்டனாக்களும்,
சில காலனாக்களும் .

பெரும்பாலும் என்
ஓவியங்கள்
கிருஷ்ணனோ ,
சிவனோ இல்லை

என் காதலியின்
காதலின்
முகம் மட்டுமே

இன்று புதிய ஓவியம்
அவளின் தெற்றுப்பல்
தெரியும் சிரிப்பு.

அவள் பார்த்திருந்தால்
வழக்கம் போல்
ஒரு முத்தம் தந்திருப்பாள்

அதற்க்காகவே
பத்துப் படங்களை வரையலாம்

வரைந்த ஓவியத்தை
பல கோணங்களில் பார்கிறேன்

நிழலை பிரதிப் பலிக்கவே
நேரம் எடுத்துக் கொள்கிறேனே ?
அசலை செதுக்க
என் செய்திருப்பன்
பிரம்மன் ?

ஐயோ !!!????????
எங்கிருந்து வந்தது
அந்த மழை

தெறித்து ஓடும் மக்கள் கூட்டம்
ஓடும் வேகத்தில்
ஒருவன்
எனை
கீழே தள்ளிவிட
அடுத்தவன் என் காலை மிதிக்க
கொடுரமான வலி ...

மேடையின்
ஓரமாய் உட்காருகிறேன்
பேய் எனப் பேயும் மழை .

அடைமழையில் அழுகிறேன்.

உற்றுப் பார்பவற்கும் ,
பேருந்து நிலையத் தினின்று எட்டிப் பார்பவர்கும்

நான் அழுவது
கால் வலிக்காக அல்ல
கரையும் காதலியின் ஓவியத்திற்காக .

இனியவன் .ஜி .இளையராஜா

அந்த அதிகாலை .

ஆரம்பிப்பதற்கு
முன்பே
அலுத்துவிடுகிறது
வாழ்க்கை .

குழப்பங்கள்
குமியடிக்க
ஒரு குழந்தையைப்போல்
சுருண்டு உறங்கினேன்

சற்றே மாற்றத்துடன் விடிந்தது
அந்த அதிகாலை

புதிய நபரை
பார்த்த பின்னும்
வள் வள்ளென்று,
குறைக்காத நாய்

தேடாமலே
கிடைத்துவிட்ட செருப்பு
பள்ளி செல்ல
அடம் பிடிக்காத குழந்தைகள்.

குற்றம் கூறி
சண்டை பிடிக்காத மனைவி .


நேரம் தவறாமல் வந்து
நெரிசல் இல்லாத பேருந்து

வியர்வையில் கசங்காத
என் சட்டை .

வணக்கம் சொல்வதற்கு முன்பே
புன்னகையுடன் கைகுலுக்கும் மேலாளர்.

தலைவலிக்கும் முன்பே
கிடைத்த தேனிர்.

தொலைப்பேசியில் தொடர்புக் கொண்ட
குறுஞ்செய்தி நண்பர்கள் .

போக்குவரத்த்கு
நெரிசல் இல்லாத
சாலைகள்

நுழைவதற்குள்ளகவே
கனிவுடன்
வரவேற்கும்
மனைவி

அன்றைய சமையலில்
எனக்கு பிடித்த உணவு

விளம்பரம் இல்லாத
தொலைக்காட்சித் தொடர்கள்.

சே !
என்னடா ஆச்சு இந்த உலகத்துக்கு ?

தொல்லையின்
வாய் வழி
பிதுங்கி வருவது தானே
வாழ்கை .

கட்டிலின் விளிம்பினின்று
புரண்டு விழுகிறேன்
நான் கீழே விழுந்ததை விட ,
தன் தூக்கம் கலைந்ததாய்
மனைவி கதறுகிறாள் .

ஆஹா
நான் சராசரி வாழ்க்கைக்கு
வந்து விட்டேன்.

இனியவன் . ஜி . இளையராஜா .

பால் வெளித் திரள் .

தூக்கம் விழித்த
பின்னிரவில் ,
வெளிக் காற்று வாங்கி வான் நோக்கினேன்.

எரியும் நட்சத்திரங்கள்
ஏற்றி வைத்த தீபங்களாய் ?

அறிவியல் சொல்கிறது
ஆயிரமாயிரம் சூரியக் கும்பங்கள்
பால்வெளி திரளில்
பயணிக்கின்றதாம்.

அந்தக் குடும்பங்களில்
பூமி இருக்குமா ?
எனில்,

மனித வளர்ச்சி ?
மொழி வளர்ச்சி ?
அறிவியல் ?

தீயைக் கண்டறிந்திருப்பனா ?
திராவிடம் வளர்திருப்பனா ?
அங்கே
தமிழ் இருக்குமா ?
காதல் ?
கவிதை ?
இசை ?

அரசியல் ?
மதம் ?
சாதி?
தீண்டாமை ?


பொறாமை ?
இன வேற்றுமை ?
மொழிக் கூச்சல் ?
நிலக் கோட்பாடு ?
நீருக்குப் போராட்டம் ?

திருட்டு ?
விபச்சாரம் ?
தீவிரவாதம் ?
கல்விக்கு கட்டணம் ?
வரதட்சணை ?
விதி மீறல் ?

எது இருக்கிறதோ இல்லையோ

வேலை கிடைக்குமா ?

விண்ணப்ப படிவம்
எங்கே கிடைக்கும் ?

கையுட்டு ஏதும்
தேவைப் படுமா ?

விபரம்
அறிந்தவர்
தொடர்புக் கொள்க ????????????????????????????

விழிப்புடன்
மனிதன் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இனியவன் .ஜி .இளையராஜா .

பார்வை இழந்த நாள்

உலகக் குளத்தில்
ஒருநாள்
எப்போதும்
போல்
குளித்துக் கொண்டிருக்கிறேன் .

திடிரென பார்வை பறி போகிறது
கதறி அழுகிறேன்
கரையின் இரு மருங்கிலும்
கண்டவர்
துணுக்குற ,

ஆறுதல் சொன்னார்கள் .
பின்பு
அவசர
வேலைக்குள் ஆழ்ந்து போனார்கள் .

கண்ணிருக்கும்போதே
குருடன் நான்
இனி என் செய்வேன்?

முன்னுரையின்
முதல் வாக்கியமே
முற்றும் என்பதா ?

இரண்டு சாத்தியக் கூறுகள்
மூழ்கிப் போக வேண்டும்.
அன்றி
மூச்சு திணற வேண்டும்.

எந்தை
புகட்டியது போல்
கை கால் உதைக்கிறேன்.

அட ,
கல்விக் காற்றால்
நன்றாய் சுவாசிக்கிறேன் .

ஒன்று மட்டும் உறுதி
கரைந்து விடப் போவதில்லை
நிச்சயம்
கரைத் தொடப் போகிறேன்.

சில படகுக் காரர்கள்
பார்த்து பரிதாபப் படுகிறார்கள்.

நீந்திக் கொண்டே இரு
ஆறுதல் சொன்னார்கள்.

சில படகுக் காரர்கள்
என்னிடம்
தாமரைக் கேட்டார்கள்.

கைகெட்டியத்தை
பறித்துத் தருகிறேன் .

கை கொடுப்பார்கள் என்றல்ல
தாமரை காயும் வரை
என்
நினைவிருக்கட்டும்.

ஒன்று மட்டும் உறுதி
நான் ,
கரைத்து விடப்போவதில்லை
நிச்சயம் கரை தொடப் போகிறேன் .

( என் தந்தை இறந்த பொழுது என் நிலை - மேற் கண்ட கவிதை )

இனியவன் .ஜி .இளையராஜா .

புதுப் பூ

அதோ !
கவிக்கடலில்
மரபு நீச்சல் போட்டு
புகழ் சொட்ட
நிற்கும் பலர் .

நானோ,
கால் நனைத்த மரபு நுரையிலும்,
சந்த அலையிலுமே,
மயங்கிப் போகிறேன்.

முரண்டு பிடிக்கவில்லை
முரண்பாடும் இல்லை

கடலை தொடுகின்ற
இந்த கரை
பிடித்திருக்கிறது .

புதுக் கவிதை
சிப்பிகள்
பொறுக்குவதிலேயே

இந்த குழந்தை
விருப்பம்
கொள்கிறது .

இனியவன் .ஜி .இளையராஜா .

Tuesday, January 27, 2009

சமையற் குறிப்புகள் (நளன்)

அண்மையில் செசெல்சு நேஷன் செய்தித் தாளில் வெளி வந்த சில புகைப் படங்கள் (கன்ச்டன்ஸ் லெமுரியா ரிசார்ட்)..............






......................

வேல் விழியாள்

பீலி யொத்த பாதங்கள்.
பிடில் யொத்த நாணங்கள் .
முகில் யொத்த தேகம்

மயிர் யொத்த இடை
மழை யொத்த பேச்சு
என் மனசெங்கே போச்சு ?

அழகிய சலஞ்சலம்
அதிகாலை சங்கீதம்

வேல் விழியாள்.
அவள்
வேல் விழியால்...........

கருங் குழலாள்.
அவள்
கருங் குழலால்........

கற்கண்டு மொழியாள்.
அவள்
கற்கண்டு மொழியால்...........

ஈர்ப்பு விசை இற்று போக ,
இளங் காற்றில் திரியாலானேன்.

இனியவன். ஜி. இளையராஜா

கவனம் கலைத்தவள்

தெரியாத முள்ளில்
கால் வைக்க
தைக்குமே முள்
அந்த கணத்தில் ,

எதேச்சையாய் வானம் நோக்க
எரிந்து விழுமே
எரி நட்சத்திரம்
அந்த கணத்தில் ,

கரைத் தொட்டு மீண்டும்
கடலைச் சேருமே
அலை அந்த கணத்தில்,

அழுகின்ற மழலை
கவனிக்கிறார்களா
பார்த்து ,
மீண்டும்
அழத் தொடங்குமே
அந்த கணத்தில்,

மனித இனம்
நெருங்கினாலே
கிலையினின்று
பறக்குமே பறவை
அந்த கணத்தில்,

தீக்குச்சிக்கும்
தீப்பெட்டிக்கும்
உரசலில் பிறக்குமே
நெருப்பு
அந்த கணத்தில்,

கொண்டேன்
கொண்டேன்
காதல் கொண்டேன்.


இனியவன் .ஜி .இளையராஜா

Saturday, January 24, 2009

எண்ணக் குமிழ்கள் 2

ஆதலால் மானிடரே தவறு செய்யுங்கள்?!

ஒரு வித்தியாசமான மேற்கோள் படித்தேன் .

“பிறருடைய தவறுகளில் இருந்து உன்னை திருத்திக் கொள் , ஏனென்றல் எல்லா தவறுகளையும் செய்ய உனக்கு நேரமில்லை ”.

என்னைப் பொறுத்த வரையில் ,

“உன்னுடையத் தவறுகளை நீயே செய் ”

அனுபவம் = மொத்த தவறுகள்

உயர் பதவியில் இருக்கும் ஒருவர் செய்த சாதனைக்கு அன்று பாராட்டு விழா .

எப்படி உங்களால் இந்த நிலையை எட்ட முடிந்தது ?

நான் எடுத்த சரியான முடிவுகள் தான் காரணம் .

எப்படி உங்களால் சரியான முடிவுகளை எடுக்க முடிந்தது ?

சரியான முடிவுக்கான காரணிகளை கண்டுகொண்டேன் .

காரணிகளை எங்ஙனம் கண்டறிந்தீர்கள் ?

நான் செய்த சரியான தவறுகளினால் !!!!!!!!!!!!!!!!!

அதென்ன சரியான தவறு ?

சரியில்லாத தவறு ?

சில பேர் இருக்கிறார்கள் {சரியிலாத தவறு }

எனக்கு அதை நன்றாக செய்யத் தெரியும் ,இதை நன்றாக செய்யத் தெரியும் , என்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்வார்கள் .

இது எப்படி ஒரு முறை செய்து காட்டுங்கள் என்றால் ,எதையாவது சொல்லி நழுவி விடுவார்கள் .

உங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .



எப்படி ??????????????????????



உங்களுக்கு தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்ளுங்கள் .
அதை தெரிந்து கொள்ள முயற்ச்சி செய்யுங்கள் .

பயிற்சியில் தவறு நேரும் {சரியான தவறு }

தொடரும் முயற்சியால் ,
தவறுகளை நீக்கலாம் .

ஆதலால் மானிடரே தவறு செய்யுங்கள் ……………..
இனியவன் ஜி .இளையராஜா

Friday, January 16, 2009

என் அலைவரிசையை உலகத்தோடு இணைக்கும் முதல் முயற்சி

அன்பர்களே ,நண்பர்களே,
என் அலைவரிசையை உலகத்தோடு இணைக்கும் முதல் முயற்சி இது .
உற்சாகப்படுத்துதலோ ,
தவற்றை சுட்டிக்காட்டுவதிலோ ,
உங்களின் விமர்சனகளை பதிக்க வேண்டுகிறேன் .
.
உங்களின் படைப்புகள் ஏதேனும் இருப்பின் ,(எந்த துறையாக இருப்பினும் )
அனுப்பி வையுங்கள் .

பரிசீலித்து உங்களின் பெயருடனே வெளியிடப்படும் .

பரிசீலிக்கப்படவில்லை, எனில் உங்களின் முகவரிக்கே அனுப்பி வைக்கப்படும் .


படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : kurilnedil@gmail.com


வாருங்கள் கை கோர்ப்போம் .

இனியவன் .இளையராஜா . ஜி .

அடுத்த பதிவில்

அடுத்த பதிவில் .................
ஏற்றம் தரும் அதிர்ஷ்ட எண்கள் -தெய்வத்திரு T .K.S. கணேசன்.
(நூல் அறிமுக விழா –புகைப்படங்களுடன் அடுத்த பதிவில் )

சமையற் குறிப்புகள் .

இசை விருந்து .

நகைச்சுவைத் தோரணங்கள் .

சொர்கத் தீவு –சீசெல்சு ஒரு பார்வை .

என்னைக் கவர்ந்த வாசகங்கள் .

மேலும் பல பயனுள்ள பக்கங்களுடன் …………….

Wednesday, January 14, 2009

எண்ணக் குமிழ்கள் 1

வள்ளுவன் வாய் மொழி போல் ,
எண்ணத்தின் கன்னக் கதுப்புகள் சிவக்கும் போதெல்லாம் ,உனைச் சுற்றி பல வண்ண விளக்குகள் எரியும் .
இருக் குழுக்கள் உண்டு ,
ஒன்று - இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் .
இரண்டு -மாறிவிட்ட இயற்கையில் மகிழ்ட்சி காண்பவர்கள்
சில நேரங்களில் விதிகளை மாற்ற வேண்டும் ,
சில நேரங்களில் விதிகளுக்கேற்ப நாம் மாற வேண்டும் .
அது ஒரு செருப்புத் தயாரிக்கும் நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வு . நேர்முகத்தேர்வில் தகுதி பெற்ற இருவர்கள் .

யாருக்கு வேலை தருவது என்பது கேள்விக்குறியாக ?

மேலாளர் ,இருவரையும் ஒரு குறிபிட்ட பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் நிலைப் பற்றியும் ,அவர்களின் செருப்பின் மீதான விருப்பு வெறுப்பு பற்றியும் அறிந்து வரச் செய்தார் . இருவரில் ஒருவர் சொன்னார் ,

இங்கு யாருமே செருப்பு அணிவதில்லை , இங்கு நம்மால் வேருன்ற முடியாது .

இரண்டாமவர் சொன்னார் ,இங்கு யாருமே செருப்பு அணிவதில்லை , எனவே நாம் செருப்பை அறிமுகப்படுத்தி விற்பனையில் கோலோய்ச்ச்சலாம் .

இரண்டாமவற்கே வேலை கிடைத்தது .

ஒரே நிகழ்ச்சியைய் இரு வேறான மன நிலையில் காண்பது ,இரு சமையற் நிபுணர்கள் ,
இரு பப்பாளியை அறிகின்றனர் . இருவரின் பப்பளிக்குள்ளும் விதை இல்லை .
முதல் சமையலர் சொல்கிறார் ,இந்த பப்பாளி சரி இல்லை .

இரண்டாமவர் , ஆஹா விதைகளை நீக்கும் வேலை மிட்சம் .

நான் முன்பே சொன்னது போல் ,

இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் .அல்லது மாறிவிட்ட இயற்கையில் மகிழ்ச்சி காண வேண்டும் .


உன்னை புதுப்பித்துக் கொள்ள ,அன்றி ஓடும் உலக நதியில் உன் உராய்வை உயிர்பிதுக்கொள்ள நீ சூடும் எந்த பூவும் அழகு தான் .


இனியவன் .ஜி .இளையராஜா

.

நேற்றைய அதிசயம்

நட்சத்திரக் கண்கள்
இரண்டு
வளர்பிறை வாய்
ஒன்று
அட ,
வானுக்கு பிறந்த,
அற்புதக் குழந்தை .
வளர்பிறை மட்டும் –சிவனின் அம்சம் .
ஒற்றை நட்ச்சத்திரம் –உயிர்த்தெழுந்த இயேசு
வளர்பிறையோடு சேர்ந்த நட்சத்திரம் –இசுலாத்தின் ஒளி

எனக்கென்னவோ ,
இது கனவிலே கூடநிகழாத ,
மும்மதத்தின் முத்தாய்ப்பு .

உலகம் அழிவதக்கு
இதெல்லாம் அறிகுறியா ?
அப்பாவியாய் கேட்டார்
நண்பர் ஒருவர் .

காணக் கிடைக்குமா ?
இந்தக் காட்சி?
அழிந்து தான் போகட்டுமே ,
அகிலம் .
இனியவன் ஜி .இளையராஜா

இவர்கள் புதியவர்கள் ....

கருத்த மேகம்
மழை வருமா ?

நனைவதற்கு

மனமில்லை அவனுக்கு
குடை கொண்டு செல்கிறான் .

பயணத்தின் பாதியிலே
மழை நின்று விட ,

அலுத்துக் கொள்கிறான் .

என்னடா இது !
இந்த மழையே
இப்படித்தான் ,

குடை இருந்தால்
மழை வராது ,
மழை வரும் போது
குடை இருக்காது .

மழை வரும் போது
குடை வைத்திருப்பினும் ,
குடை வைத்திருந்து
மழை இல்லையெனினும் ,

அவனின் குறிக்கோள் என்னவோ
நனையாமல் இருப்பது தானே ?

இவர்கள் புதியவர்கள்
இவர்களுக்கு
கடவுளும் வேண்டும்
கஷ்டமும் வேண்டும்.!!!!!!!!!!!!
இனியவன் ஜி .இளையராஜா

புல்லாங்குழலிடம் பூங்காற்று

ஏ மூங்கிலே ,

வருடும் போதெல்லாம்
வாய் இசைக்கிறாய் ,

மறந்து போன
உன் வாழ்க்கைக்கு
நான்,
மருந்திடும் போது ,

பூரிக்கின்றாயா ?

புலம்புகின்றாயா ?

இனியவன். ஜி .இளையராஜா

கவிதை சாரல் அறிமுகம் 1

ஒரு நாள்

இல்லாத ஊருக்கு
வழி கேட்டேன்
நில்லாத காற்றிடம் ,

புரியாத மொழியில் சொன்னது
தெரியாத பூவிடம் கேட்க சொல்லி ,,

கரையாத பொருளை கரைக்க
மறையாத கானல் நீர் தேவை .

சுற்றாத திசையில் பூமி சுத்த ,

பஞ்சும் நெருப்பும்
பற்றாத விதிக்கு ஒப்பம் இட்டால்
குற்றால அருவி வானோக்கி தாவும் .

சிக்காத கிளி ஒன்று
சொல்லாத ஆருடம் சொல்ல ,

இல்லாத பொருளில் கவிபடித்து
எனை கொல்லாமல் விடுக !!!!!!!!!!!!

இனியவன் ஜி .இளையராஜா

vanakkam

Anbirkiniya tamizh idayangale,
iniyavan elayaraja g in vankkangal.
inivarum kaalathil , naan ungalodu kai kulukka kaathirukkiren.
kavithaigalai,
katturaigalai,
nagaicsuvaigalai,


INI
ANATHAM AARAMBAM.


iniyavan,
elayaraja g